3.பச்சைக் கிளிகள் பத்தொன்பது.
நான் வாழ்வில் இதுவரை கண்டிராத ஒரு புதிய காட்சியை இன்று கண்டேன். சூரியன், தான் வெளிப்படும் முன், தன் கிரணங்களை அனுப்பி உயிரினங்களை உசுப்பும் சந்தியா வேலையில், வீட்டின் அருகாமையில் உள்ள சாயா கடையில் வாங்கிய, ஏலக்காய் பொடி தூவிய ஒரு சாயாவை கையில் பிடித்தபடி, பக்கத்து கடை படிக்கட்டில் அமர்ந்துகொண்டு, குளிர்ந்த தென்றல் காற்று உடல் வருடிச் செல்ல, கொஞ்சம் தேனீர் நிரம்ப வானம் என்ற வரிகள் மனதில் ஓட, வானத்தை அன்னாந்து பார்த்தபடி டீ குடித்துக்கொண்டிருந்த நேரத்தில், வானத்தில் கீக் கீக் கீக்
என்று கத்தியபடியே கூட்டமாக கிளிகள் பறப்பதை கண்டேன்.
இதில் விஷேஷம் என்னவென்றால், பறந்த கிளிகளின் எண்ணிக்கை ஒரு இருபதாவது இருக்கும். ஒரு பத்து வினாடி இடைவெளியில் இதேபோன்று, இன்னோரு கூட்டம் பறக்க கண்டேன்; இந்த முறை ஒரு முப்பது இருக்கும். வாழ்வில் முதல் முறையாக இத்தனை பச்சைக் கிளிகள் ஒன்றாக பறப்பதைக் கண்டேன்.
இந்த காட்சியை கண்டபின் வீடு திரும்பும் நேரத்தில், அருகில் உள்ள மசூதியின் உயர்ந்த மினாரை தொட்டு விடுமோ என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு தாழ்வான உயரத்தில் பறந்த விமானத்தைக் கண்டதும் ஒரு புதிய காட்சி.
ஒவ்வொருநாளும், ஒவ்வொரு காட்சியும் நமது வாழ்வில் புதியனதானே.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

0 Comments:
Post a Comment
<< Home